ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப் பகுதியில் மான் இறைச்சி கடத்தியதாக 8 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப் பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காடகநல்லி வனப் பகுதியில் செந்நாய்கள் ஓடுவதை கண்டு வனத் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது செந்நாய்கள் வேட்டையாடிய மானை 8 பேர் கொண்ட கும்பல் செந்நாய்களை துரத்திவிட்டு, மான் இறைச்சியை பதுக்கி கடத்த முயன்றனர். வனத் துறையினர் அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், காடகநல்லியைச் சேர்ந்த உத்தமன், லட்சு, நாகராஜ், லட்சுமணன், கோபால், துரைசாமி, நடராஜ், சின்ராஜ் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை வனத் துறையினர் கைது செய்து, சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த அருண்லால் 8 பேருக்கும் வன குற்றவியல் சட்டப்படி தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தவிட்டார். அபராத தொகையை செலுத்திய பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.