தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்காக அதிக எண்ணிக்கையில் மாடுகள் கொண்டுவரப்பட்டன.
கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.3,000 முதல் ரூ.12,000 வரை மதிப்பிலான 300 கன்றுக் குட்டிகள், ரூ.12,000 முதல் ரூ.38,000 வரை மதிப்பிலான 350 பசுக்கள், ரூ.10,000 முதல் ரூ.42,000 வரை மதிப்பிலான 350 எருமை மாடுகள் விற்பனைக்கு வந்தன. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் மாடுகள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
வழக்கமாக தொடர்ந்து மழை பெய்தால் பசும்புல், செடிகள் வளர்ந்துவிடும். பசுந்தீவனம், குடிநீர் கிடைக்கும்போது பொதுவாக மாடுகளை விற்க மாட்டார்கள். பருவ மழை காலத்தில் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய தயங்குவார்கள். ஆனால், உழவுப் பணி, கல்விக் கட்டணம் செலுத்துதல், திருமணம் போன்ற பணத் தேவைகளுக்காக தற்போது மாடுகள் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். ரூ.3 கோடி வரை மாடுகள் விற்பனையாகின என்றார்.