ஈரோடு

மேல்நிலை வகுப்பில் வேளாண்மை தொழிற்கல்வி படிப்பு சீரமைக்கப்படுமா?

மேல்நிலை வகுப்பில் வேளாண்மை தொழிற்கல்வி படிப்பை சீரமைப்பதுடன் தனியார் வேளாண்மைக்

கே.விஜயபாஸ்கா்

மேல்நிலை வகுப்பில் வேளாண்மை தொழிற்கல்வி படிப்பை சீரமைப்பதுடன் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில் வேளாண் தொழிற்கல்வி பாடப் பிரிவு உள்ளது. 400 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், 10 க்கும் குறைவான தனியார் பள்ளிகளில் இந்தப் பாடப் பரிவு உள்ளது.  இந்த பாடப் பிரிவில் ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 முடிக்கின்றனர்.
இந்த தொழிற் கல்வியில் பிளஸ் 2  முடிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளான வேளாண்மை, கால்நடை, மீன்வள அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர முடியும்.  மேலும், சேர்க்கை கலந்தாய்வில் இந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 
பி.எஸ்சி. வேளாண்மை பட்டப் படிப்பை பொருத்தவரை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் 6 உறுப்புக் கல்லூரிகளில் 620 இடங்கள் உள்ளன. பி.எஸ்சி. தோட்டக்கலை பட்டப் படிப்பில் 3  உறுப்புக் கல்லூரிகளில் 120 இடங்கள் உள்ளன. தவிர அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆயிரம் இடங்கள் உள்ளன.
மொத்தமுள்ள 1,740 இடங்களில் பிளஸ் 2 தொழிற்கல்வி வேளாண்மை பாடப் பிரிவு முடித்த மாணவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 87 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இதுதவிர கால்நடை அறிவியல், மீன்வள பட்டப் படிப்பில் 15 க்கும் குறைவான எண்ணிக்கையிலும், பிஎஸ்சி வனவியல், பிஎஸ்சி வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்பில் தலா 3 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.  
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புபெற்ற 27 தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. இதில் பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களில் பி.எஸ்சி. வேளாண்மைப் பட்டப் படிப்பில் 1,581 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பி.எஸ்சி.  தோட்டக்கலை பாடப் பிரிவில் 127 மாணவர்களை சேர்க்கின்றனர். ஆனால், இதில் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுவதில்லை. 
சேர்க்கையில் 10 சதவீத ஒதுக்கீடு: இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.மாதவன் கூறியதாவது:
வேளாண்மை தொழிற்கல்வி பாடப் பிரிவில், கடந்த ஆண்டு பாடத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், உயிரியல், வேளாண் அறிவியல், கணினி தொழில்நுட்பம், வேளாண் அறிவியல் செய்முறை என மொத்தம் 6 பாடங்கள் உள்ளன. பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், உயிரியல், வேளாண் செயல்முறைகள், 2 செய்முறை பாடம் என மொத்தம் 6 பாடங்கள் உள்ளன. 
இதில் பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல், பிளஸ் 2 வகுப்பில் ஒரு செய்முறை பாடத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அடிப்படை அறிவியல் என்ற தலைப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை உள்ளடக்கிய பாடத்தை இரண்டு ஆண்டுகளிலும் கற்றுத்தர வேண்டும்.
இதன் மூலம் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை பட்டப் படிப்பில் சேரும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களின் திறன் மேம்படும். மேலும்  பி.எஸ்சி இயற்பியல், வேதியியல் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் தகுதியையும் பெற முடியும். 
மேலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை பாடப் பிரிவுகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டை தனியார் கல்லூரிகளிலும் செயல்படுத்த வேண்டும்.
இதேபோல், கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், சட்டம் ஆகிய படிப்புகளுக்கும் சேர்க்கையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசிடம் கடந்த ஆண்டு வலியுறுத்தியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 
ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் வேளாண்மை தொழிற்கல்வி பாடப் பிரிவில் பிளஸ் 2 முடிக்கும் நிலையில் இந்தப் படிப்பு சார்ந்து 100 மாணவர்களுக்கும் குறைவாக தான் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும் இந்த பிளஸ்1 இல் தொழிற்கல்வி வேளாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனை கவனத்தில் கொண்டு பிளஸ்1, பிளஸ் 2 தொழிற்கல்வி வேளாண்மை படிப்புக்கான பாடத் திட்டத்தில் அடிப்படை அறிவியலை ஒரு பாடமாக சேர்க்கவும், உயர்கல்வி சேர்க்கையில் இப்போதுள்ள 5 சதவீத ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தவும், அதனை தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT