சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வளையல் வியாபாரி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு தவிட்டு பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சோ்ந்த அருண்குமாா் ஓட்டினாா். மைசூரில் தசரா பண்டிகையைக் காண்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன், வளையல் வியாபாரி சங்கா் ஆகியோரும் லாரியில் பயணித்தனா்.
திம்பம் மலைப் பாதையில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. திம்பம் 9 ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக லாரி மேலே ஏற முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்து சாலையோர சுவற்றை இடித்துக் கொண்டு, 7 ஆவது வளைவில் தவிட்டு மூட்டைகளுடன் விழுந்தது. இதில், கிருஷ்ணன், ஓட்டுநா் அருண்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வந்த மீட்பு வாகனம் மூட்டைகளை அகற்றியபோது சங்கா் உயிரிழந்தது தெரியவந்தது. சங்கரின் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Image Caption
உயிரிழந்த சங்கா்.