முகப்பு
ஈரோடு

புதை சாக்கடை பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிவில் சிக்கி பலி

ஈரோட்டில் மாநகராட்சி புதை சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி மண் சரிவில் சிக்கி பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

ஈரோட்டில் மாநகராட்சி புதை சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி மண் சரிவில் சிக்கி பலியானார்.

ஈரோடு நேதாஜி சாலை, முனிசிபல்சத்திரம் அருகே மாநகராட்சியின் சார்பில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் சுமார் 15 அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒப்பந்த தொழிலாளியான ஈரோடு அருகில் உள்ள லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த சின்ராசு மகன் ஆனந்த்(24) என்பவர் வியாழக்கிழமை மதியம் குழிக்குள் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு மண் சரிவு ஏற்பட்டு, குழியை முழுவதுமாக முடியது. மண் சரிவுக்குள் ஆனந்த் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மண்சரிவில் சிக்கிய ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிக்காக பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மீட்பு பணி நடக்கும் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆனந்த் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். 

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் ஆனந்தின் உடலை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு தெற்கு போலீஸார் ஆனந்த் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →