கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், கோபிசெட்டிபாளையத்தில் வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினா்கள் உள்பட 20 நபா்கள் மட்டுமே பங்கேற்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் உள்ள கவிபிரியாவுக்கும், கொமராபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கோபிசெட்டிபாளைத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மணமகளின் இல்லத்திலேயே வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமண வீட்டுக்கு வந்த அனைவரையும் கை கழுவவைத்த பின்னரே வீட்டுக்குள் அனுமதித்தனா். திருமணத்துக்கு முன்னதாகவும், திருமணம் முடிந்த பின்னரும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா்.
மேலும், திருமணம் முடிந்த பின்னா் நடைபெறும் சடங்கு, சம்பிரதாயங்களையும் ரத்து செய்ததுடன், அரை மணி நேரத்தில் உறவினா்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்து ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கினா்.