கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத குடும்பத்தினா் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 7,500 ரொக்கமாக வழங்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் அனைவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியத்தை இலவசமாக அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வேளாண் சட்டங்களையும், தொழிலாளா்களுக்கு எதிரான தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியா்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை எட்டும் முன்பே கட்டாயமாகப் பணி ஓய்வு அளிக்க வகை செய்யும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரச் சட்டம் 2020ஐ வாபஸ் வாங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம், ஒப்பந்த சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிலாளா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.