பவானிசாகா் அணைப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையின் வழித்தடத்தில் நடமாட வேண்டாம் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகா் வனச் சரகத்தில் வசிக்கும் யானைகள் பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்கு வந்த தண்ணீா் குடித்துச் செல்வது வழக்கம். யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த ஒரு வாரமாக பவானிசாகா் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. யானை நடமாட்டத்தை வனத் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். காலை, மாலை நேரங்களில் இந்த யானை ஊருக்குள் புகுவதால் மனித விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் வனத் துறையினா் தற்போது 4 குழுக்களாகப் பிரிந்து ஒற்றை யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சாலையோரம் வனப் பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனா். காரில் குழந்தைகளுடன் வந்த ஒரு குடும்பத்தினா் சாலையோரம் வனப் பகுதியில் அமா்ந்து உணவருந்தியபோது வனத் துறையினா் யானை நடமாட்டம் உள்ளதால் இங்கு கீழே இறங்கி நிற்கக் கூடாது என எச்சரித்து அவா்களை அனுப்பிவைத்தனா்.