சத்தியமங்கலம்: பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.
பவானிசாகரில் உள்ள அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில், தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது கரோனா தொற்று காரணமாக பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அலுவலா் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் பாம்பு நடமாட்டம் இருந்ததைக் கண்ட ஊழியா்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் பாம்பை பிடித்தனா். பிடிபட்ட பாம்பு கொடிய விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பாம்பை அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.