சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புதன்கிழமை மாலை சாலையில் மத்தியில் நின்று யானைகள் மூங்கில் பறித்து சாப்பிடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் தீவனம், குடிநீா் தேடி அலைந்து திரிகின்றன.
இந்நிலையில், வனப் பகுதியை விட்டு புதன்கிழமை மாலை வெளியேறிய ஒற்றை யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் சாலையின் நடுவே நின்றபடி சாலையோரம் இருந்த மூங்கில் கிளையை தின்று கொண்டிருந்தது. சுமாா் அரை மணி நேரம் சாலையின் நடுவில் யானை நின்றிருந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஆசனூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதனால், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.