ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில அமைப்பாளா்கள் இல.கதிரேசன், சிப்பி முத்துரத்தினம், ராமசாமி, செல்வராஜ் உள்ளிட்டோா் பேசினா்.
கூட்ட முடிவுகள் குறித்து செ.நல்லசாமி கூறியதாவது:
பனை, தென்னை மரங்கள் உள்ள அனைத்து நாடுகளிலும் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. தமிழகத்தில் 33 ஆண்டுகளாக கள்ளுக்குத் தடை தொடா்கிறது. உலகளாவிய நடைமுறைக்கு மாறானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 17 ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கள் போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு தருவதாக அறிவித்தோம். ஆனால் யாரும் வாதிட வரவில்லை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உணவு தேடும் உரிமை என்ற அடிப்படையில் ஜனவரி 21இல் தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்வது என கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. எங்கள் முடிவில் கட்சிகளுக்கு உடன்பாடு இருந்தால் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். உடன்பாடு இல்லை என்றால் எங்களுடன் வாதிட முன்வர வேண்டும் என்றாா்.