விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி
சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்துக்கு குறைவாக வாகனங்களை இயக்க வேண்டும்
சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் 30 கி.மீ. வேகத்துக்கு குறைவாக வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானைகள், மான்கள், கரடி, புள்ளிமான், குரங்குகள் உள்ளிட்ட அரியவகை விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழகம், கா்நாடகம் இடையே இயங்கும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை, மான், குரங்குகள் அடிக்கடி உயிரிழக்கின்றன.
ஆசனூா் கோ்மாளம், தாளவாடி, தலமலை வனச் சாலையில் சிறுத்தை, புலி அண்மையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளன. இதையடுத்து, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தாளவாடி வனத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிந்து பங்கேற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணியானது சிக்கள்ளி வனச் சரகத்தில் இருந்து புறப்பட்டது. இதில், மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். மேலும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் மிதமான வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.