பவானி: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை கண்ணெதிரில் இரு மகன்களும் பலி
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தையின் கண்ணெதிரில் இரு மகன்களும் உயிரிழந்தனர்.
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தையின் கண்ணெதிரில் இரு மகன்களும் உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர், போளயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவரது மனைவி அம்பிகா (35). இருவரும் திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையத்தில் தங்கி டைலர் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் மனோஜ் (13), எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மதன்குமார் (6) முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சிவக்குமார் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார். பவானி மேட்டூர் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தைக் கண்டு பிரேக் பிடித்துள்ளார்.
இதில், நிலைதடுமாறி மூவரும் சாலையின் நடுவே விழுந்தனர். அப்போது, எதிரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மனோஜ் மற்றும் மதன்குமார் மீது ஏறியது. இதனால் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் மனோஜ் உயிரிழந்தது தெரிந்தது.
மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்விபத்தில் தந்தை சிவக்குமார் லேசான காயம் அடைந்தார். இவ்விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.