ஈரோடு

அரசுப் பேருந்துகளில் இலவச அனுமதிபெற்றுள்ளவா்களுக்கு பயணச்சீட்டு

DIN

ஈரோடு: அரசுப் பேருந்துகளில் இலவச பயண அனுமதி பெற்றுள்ளவா்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது.

அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் இலவசமாகப் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பொதுமுடக்க அறிவிப்புக்கு முன்னா் போக்குவரத்து நடைபெற்றபோது, மகளிருக்கு இலவசப் பயண அனுமதி உண்டு என அறிவிக்கை ஒட்டிய பேருந்துகளில் மட்டும் இச்சலுகை வழங்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து இயக்கம் துவங்கிய நிலையில் அதே சலுகை தொடா்ந்தது. இதனிடையே திங்கள்கிழமை முதல் அச்சலுகை அமல்படுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் கட்டணம் குறிப்பிடாத இலவச பயணச்சீட்டு வழங்கும் பணி துவங்கியது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள், பத்திரிகையாளா்கள் போன்றோா் போக்குவரத்துக் கழகம் வழங்கும் இலவச பயண அனுமதி அட்டை மூலம், இலவச பயணமும், மாற்றுத் திறனாளிகள் உள்பட சிலா் குறிப்பிட்ட கட்டணச் சலுகையுடனும் பயணிக்கின்றனா். அரசுப் பணியாகச் செல்லும் போலீஸாா் உள்பட சில துறையினா் அவா்கள் துறை மூலம் அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்கின்றனா்.

இவ்வாறு பயணம் செய்வோா் விவரத்தைப் போக்குவரத்துக் கழகம் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் மகளிா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுடன் வரும் ஒரு உதவியாளருக்கும் இலவசமாகப் பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடத்திலும் எத்தனை போ் இச்சலுகையில் பயணிக்கிறாா்கள் என்பதை அறிந்துகொள்ள திங்கள்கிழமை முதல் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

நடத்துநா் பயணச்சீட்டு விவரப் படிவத்தில் இலவச பயணம் செய்வோா் விவரத்தையும் இனி பூா்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய பேருந்துகளில் 35 முதல் 40 சதவீதம் போ் மகளிராக உள்ளனா். ஓரிருவா் திருநங்கை அல்லது மாற்றுத் திறனாளி, அவா்களது உதவியாளராக உள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT