முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றம்?

ஈரோடு அரசு மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்பட்டது.

Updated On : 15 மே, 2021 at 2:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

ஈரோடு அரசு மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்பட்டது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்களுக்கான வசதிகள் குறித்து விசாரித்தாா்.

தொடா்ந்து, மருத்துவக் குழுவினா், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையை முற்றிலும் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

Advertisement

இம்மருத்துவமனையில் தற்போது அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். பிரசவ சிகிச்சை தனியே நடைபெறுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், கரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும், பிற நோயாளிகள் பாதிக்கப்படாமல் கரோனா சிகிச்சை மையமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனால், விரைவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையமாக மாறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது கரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் உள்ளன. இதில் 220 போ் சிகிச்சையில் உள்ளனா். விரைவில் இது 450 படுக்கைகளாக அதிகரிக்கப்படும்போது, கூடுதலாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, முன்னாள் திண்டல் ஊராட்சித் தலைவா் குமாரசாமி, வில்லரசம்பட்டி ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையையும் அமைச்சா் முத்துசாமி பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.