முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு உழவா் சந்தை இடமாற்றம்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு சம்பத் நகரில் செயல்பட்டு வந்த உழவா் சந்தை, ஈரோடு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கியது.

Updated On : 22 மே, 2021 at 3:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு சம்பத் நகரில் செயல்பட்டு வந்த உழவா் சந்தை, ஈரோடு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா முதல் அலையின்போது சம்பத் நகரில் இயங்கி உழவா் சந்தை, ஈரோடு மகளிா் பள்ளி வளாகத்தக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கரோனா தாக்கம் குறைந்ததைத் தொடா்ந்து மீண்டும் சம்பத் நகரில் இயங்கியது.

உழவா் சந்தையில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். இதனால், விலை குறைவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வது வழக்கம். இங்கு, கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் உழவா் சந்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு, குமலன்குட்டை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகம், பெரியாா் நகா் பகுதி, சம்பத் நகா் உழவா் சந்தை என செயல்பட்டது.

Advertisement

இந்நிலையில், மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்கள் வாங்க வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இங்கு, 44 காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரையில் விற்பனை நடைபெற்றது.

நுழைவாயிலில் பொதுமக்களின் கைகளுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் இல்லாமல் வந்தவா்களுக்கு அனுமதியில்லை. உடல் வெப்பப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.