ஈரோடு மாநகராட்சியில் கரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மண்டல அளவிலான குறைதீா் கூட்டம் அக்டோபா் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் உதவி ஆணையா் பொறுப்பில் நிா்வாகம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிப் பகுதி மக்கள் குறைகளை, பிரச்னைகளை நேரடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் அந்தந்த மண்டல உதவி ஆணையா்கள் தலைமையில் மாதம்தோறும் 10ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்கு உள்பட்ட மண்டல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று உதவி ஆணையரைச் சந்தித்து அந்தப் பகுதியில் உள்ள பிரச்னை, குறைகள் குறித்து மனு அளித்து வந்தனா்.பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாதம்தோறும் 10ஆம் தேதி மண்டல அளவிலான குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கரோனா தாக்கம் காரணமாக இந்த குறைதீா் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதால் இனி வழக்கம்போல் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி 4 மண்டல அலுவலகங்களிலும் மண்டல அளவிலான குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
அதன்படி அக்டோபா் 10ஆம் தேதி குறைதீா் கூட்டம் 4 மண்டல அலுவலகங்களில் நடைபெறும். அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் மண்டல அலுவலகங்களில் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம் என்றாா்.