பவானி ஊராட்சி ஒன்றியம், தொட்டிபாளையம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள 40 சென்ட் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:
தொட்டிபாளையம் ஊராட்சி, சிவகாமி நகரில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 40 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனை சிலா் ஆக்கிரமித்துள்ளதால் இதர தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இந்நிலத்தை மீட்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது சிவகாமி நகரில் அங்கன்வாடி மையம் கட்ட, நீரோடையின் கரைக்கு அருகே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.