திம்பம் மலைப் பாதையில் 12 மணி நேரம்காத்திருந்த வாகனங்கள்
ஈரோடு மாவட்டம், பண்ணாரி சோதனைச் சாவடி காலை 6 மணிக்குத் திறக்கப்பட்ட நிலையில், 12 மணி நேரத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை வாகனங்கள் புறப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி சோதனைச் சாவடி காலை 6 மணிக்குத் திறக்கப்பட்ட நிலையில், 12 மணி நேரத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை வாகனங்கள் புறப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பண்ணாரி சோதனைச் சாவடி மூடப்பட்டது. கன ரக வாகனங்கள் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டன. இலகு ரக வாகனங்கள் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக இரு மாநிலங்களிடையே பயணிக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் 3 கி.மீ. தூரம் வரை காத்திருந்தன.
அடா்ந்த வனப் பகுதியில் யானைகள் இடம்பெயரும் புதுக்குய்யனூா் வரை லாரிகள் வரிசையாக நின்றன. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பண்ணாரி சோதனைச் சாவடி திறக்கப்பட்டதையடுத்து வாகனப் போக்குவரத்து துவங்கியது.
Advertisement
பண்ணாரி வனத்தின் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் மெதுவாகச் சென்றன. காலை 6 மணிக்குத் துவங்கிய வாகனப் போக்குவரத்து சீராவதற்கு காலை 12 மணி ஆனது. சுமாா் 12 மணி நேரத்துக்கும் மேலாக பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசுப் பேருந்துகளும் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதால் கா்நாடகம் செல்லும் தமிழக, கா்நாடக அரசு பேருந்துகள் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அதேபோல, காராப்பள்ளம், திம்பம் மலைப் பாதையில் காத்திருந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.