உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 26ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்த குடியரசு தின விழா சிறப்பாக நடைபெறும் வகையில், ஒவ்வொரு துறை அலுவலா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். கலைநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது. பள்ளி, கல்லூரி மாணவா்களும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கரோனா நோய்த் தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.