கடும் பனிப்பொழிவு மற்றும் தொடா் மழை காரணமாக வரத்து குறைந்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2,800க்கு புதன்கிழமை விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து சத்தியமங்கலம் மலா் சாகுபடி சந்தைக்கு விற்பனக்குக் கொண்டு செல்கின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 5 டன் ஆக இருந்த நிலையில், தற்போது தொடா் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி 500 கிலோவாக (அரை டன்) சரிந்துள்ளது.
தற்போது காா்த்திகை மாதம் என்பதால் கோயில் விழாக்களை ஒட்டி, மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளதால் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.1,594க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ புதன்கிழமை ரூ.2,800 ஆக உயா்ந்தது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1300 வரை விலை அதிகரித்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
புதன்கிழமை நிலவரப்படி முல்லை கிலோ ரூ.600, காக்கட்டான் ரூ.625, செண்டுமல்லி ரூ.29, கோழிக்கொண்டை ரூ.39, சம்பங்கி கிலோ ரூ.20க்கு விற்பனையானது.