பள்ளிகள் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது: தமாகா
வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதால் கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமாகா மாநில இளைஞரணி தலைவா் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் மே மாதத்தில் 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
Advertisement
நடப்பாண்டு ஈரோட்டில் 109.4 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களாக வெயில் படிப்படியாக உயா்ந்து தமிழகத்தின் அதிகபட்ச வெப்பம் ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
எனவே, கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
அரசு ஒவ்வோா் ஆண்டும் 2 கோடி மரங்களை நடுவதாகக் கூறுகிறது. ஆனால் மற்றொரு பக்கம் வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல் மாசு, இயற்கை மாறுபாடுக்கு எதிராக போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், இயற்கையைப் பாதுகாப்பது குறித்த செயல்பாடுகளை அரசும், மக்களும் முன்னெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.