மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அகில இந்திய அஞ்சல், ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கத்தின் 6-ஆவது கோட்ட மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கோட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புரவலா் நல்லதம்பி முன்னிலை வகித்தாா். செயலாளா் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தாா். அஞ்சல் துறை ஓய்வுபெற்றோா் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் ராகவேந்திரன் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.
மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், பணமில்லாமல் உள் நோயாளியாக சிகிச்சை பெற மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும், போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு 105 மாதங்களாக வழங்கப்படாத பஞ்சப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் கணேசன், ஓய்வூதியா் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் மணிபாரதி மற்றும் சங்க நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் பலா் பங்கேற்றனா்.