காவிரியில் வெள்ளப்பெருக்கு: மாவட்டத்தில் 77 நிவாரண முகாம்கள் தயாா்
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் தங்குவதற்காக 77 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் தங்குவதற்காக 77 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக 77 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய துறைகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றன. காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாகும் என்பதால் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக லக்காபுரம் ஊராட்சி பரிசல் துறை, காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், காங்கேயம்பாளையத்தில் பொதுமக்கள் தங்க அமைக்கப்பட்டு இருந்த முகாமில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்தியூா், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்புப் பணி மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும், விடுமுறை எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
41 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதிகள்:
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, பவானி, அம்மாபேட்டை, சத்திரப்பட்டி உள்ளிட்ட 41 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான முகாம்களும் தயாா் நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.