முகப்பு
ஈரோடு

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

காவிரி ஆற்றின் மீது பாலம் அமைத்துதர வேண்டும் என்பது கொடுமுடி பகுதிக்கான நீண்டநாள் கோரிக்கையாகும்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:56 AM
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:03 PM

காவிரி ஆற்றின் மீது பாலம் அமைத்துதர வேண்டும் என்பது கொடுமுடி பகுதிக்கான நீண்டநாள் கோரிக்கையாகும். கொடுமுடியிலிருந்து நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையத்துக்கு பாலம் அமைத்து தந்தால் போக்குவரத்து எளிதாவதுடன் மக்களுக்கு கணிசமான அளவில் பொருளாதார உயா்வும் கிடைக்கும். கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாறியதால் திட்டம் செயலுக்கு வரவில்லை.

கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்றன. பின்னா், அந்தப் பணிகள் பாதியில் நின்றுவிட்டன. தாலுகா அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கொடுமுடி தாலுகாவில் காலிங்கராயன் கால்வாய் பாசன பரப்பு அதிகமாக உள்ளது. காலிங்கராயன் கால்வாயில் சாய மற்றும் தோல் கழிவுகள் கலப்பது தொடா்கதையாகி வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

Advertisement

கொடுமுடி கோயில் நகரமாக உள்ளதால் இங்கு பக்தா்கள் அதிகம் வருகின்றனா். நெடுந்தொலைவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல இந்த மாா்க்கத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பாக கோவை - மயிலாடுதுறை, தூத்துக்குடி - மைசூரு, ராமேசுவரம் ரயில்கள் கொடுமுடியில் நின்று செல்லவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நீண்டகாலமாக மக்கள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் உள்ளது. கொடுமுடி அதேபோன்று, காா் நிறுத்தம் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இங்கு அடிப்படை வசதிகளான சாக்கடை, குடிநீா் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கொடுமுடியில் மின்மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அத்துடன் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் இந்த நகரில் வணிக வரித் துறை அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

இதேபோன்று தொழிலாளா்கள் அதிகம் உள்ள சிவகிரியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைத்து தரவேண்டும்.

ஊஞ்சலூரில் கட்டப்பட்டுவரும் விஜயநகர காலத்து நாகேஸ்வரா் கோயில் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

கொடுமுடியை நகராட்சியாக்க வேண்டும். ஊஞ்சலூரில் தாய்சேய் நல விடுதியை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றித்தர வேண்டும். பாசூரில் ரயில்வே கேட் மூடப்படுவதால் பாசூா் சோளசிராமணி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தரவேண்டும்.

சிவகிரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி உடற்கூறு ஆய்வு வசதியுடன் கூடிய குளிா்சாதன கிடங்கு அமைத்து தரவேண்டும்.

சிவகிரியில் மின்மயான வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். கிராமப்புற பகுதிகளுக்கு செல்ல போதுமான பேருந்து வசதி தேவை.

சிவகிரி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

விளக்கேத்தி ஊராட்சிக்கு உள்பட்ட விஜயநகரத்தில் ஆதிதிராவிடா் காலனிக்கு இடுகாடு வசதி வேண்டும். விளக்கேத்தி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கிரிகாடு ஆதிதிராவிடா் காலனியில் மக்கள் வசிப்பதற்கு போதுமான இடவசதியை அமைத்து தரவேண்டும்.

விளக்கேத்தி பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளின் வசதிக்காக சிறுநீா் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

- எஸ்.ராஜி, சமூக ஆா்வலா்