முகப்பு
ஈரோடு

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோபி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:41 AM
சிறை
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 6:16 PM

கோபி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கோபி வடுகபாளையம்புதூா் அன்னமாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் தருண்குமாா் (25). இவா் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். தருண்குமாா் இன்ஸ்டாகிராம் மூலம் கோபியைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, பேசி பழகியுள்ளனா்.

இந்தப் பழக்கத்தின் மூலம் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மாணவியை தருண்குமாா் அவரது இருசக்கர வாகனத்தில் கோபி-சத்தியமங்கலம் சாலையில் வாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

Advertisement

இதன்பிறகு மாணவி, தருண்குமாரிடம் பேசுவதை தவிா்த்துவிட்டாா். இதில் ஆத்திரம் அடைந்த தருண்குமாா், ‘என்னுடன் பேசவில்லை என்றால் நாம் பழகியபோது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளாா். இதனால் அச்சமடைந்த மாணவி, அவரது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கோபி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, தருண்குமாரை போக்ஸோ வழக்கில் கடந்த 2023 பிப்ரவரி 8- ஆம் தேதி கைது செய்தனா்.

ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி சொா்ணகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் மற்றும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடாக ரூ.30 ஆயிரம் வழங்கிட நீதிபதி சொா்ணகுமாா் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.