முகப்பு
ஈரோடு

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:17 AM
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:41 PM

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஈரோடு, வீரப்பன்சத்திரம், கந்தையன்தோட்டம், கைத்தறி நெசவாளா் குடியிருப்புச் சங்க நிா்வாகி பழனிசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனு: பெரியசேமூா் பகுதியில் 45 ஆண்டுகளுக்கும்மேலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் தங்கள் பகுதி நெசவாளா் காலனி என மாற்றப்பட்டு, 1969-ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த 1983-ஆம் ஆண்டு பட்டாக்களை அரசு ரத்து செய்தது. இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டபோது, மீண்டும் பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை எங்களுக்கு முறையாக பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து, பட்டா வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும்: ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு ஐடிஐயில் கடந்த 2020-21 கல்வி ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் சாா்பில் வழங்கப்பட்ட மனு விவரம்: நாங்கள் படித்த காலத்தில் அரசு சாா்பில் வழங்க வேண்டிய விலையில்லா மடிக்கணினிகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, எங்களது கல்வி, தொடா் பணிக்கு மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பூஜை செய்யும் உரிமை வழங்கக் கோரிக்கை: அந்தியூா் வட்டம், தாமரைக்கரை, மடத்தூா், தேவா்மலை பகுதியை பொதுமக்கள் பரமசிவம் தலைமையில் அளித்த மனு: பா்கூா், தேவா்மலையில் பந்தேஸ்வரா் கோயில் பூஜை உரிமைகளை செப்புப்பட்டயம் மூலம் ஹா்த்தனஹள்ளி மடத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பூஜை செய்யும் முறை எங்களுக்கு உள்ளது. மற்றொரு தரப்புக்கு 3 மாத கால பூஜை முறை ஒப்படைத்த நிலையில், 3 மாதங்களுக்குப் பின், பூஜை உரிமையை எங்களுக்கு வழங்காமல், கோயிலுக்கு வரக்கூடாது எனக் கூறுகின்றனா். இது குறித்து, முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை வசதி: சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம், ராமமையலுாா் ஊா் பொதுமக்கள் அளித்த மனு: சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமமையலுாா் கிராமம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வடக்கு நோக்கி பீக்கிரிபாளையம் செல்லும் சாலை உள்ளது. இதில், சின்னாம்பதி கிராமத்துக்கு இணைப்பு சாலை 1 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த இரண்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் பழுதடைந்துள்ளதால் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி, வேலைக்குச் செல்வோா் பாதிப்படைகின்றனா்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, பவானி சாலை, ஆா்.என்.புதூா், குறிஞ்சி நகா் பகுதியினா் அளித்த மனு: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய எங்களுக்கு சூரியம்பாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, 40 ஆண்டுகள் ஆகியும் முறையான சாலை வசதி செய்யப்படவில்லை. எனவே, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தாா்.