முகப்பு
ஈரோடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:32 AM
சிறை
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:26 PM

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாா். சென்னிமலை அறச்சலூா் சாலை அம்மாபாளையத்தைச் சோ்ந்த அம்புரோஸ் (36) என்பவா் சிறுமியின் வீட்டுக்கு கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்றாா்.

தொழிலாளியான இவருக்கும், சிறுமியின் பெற்றோருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்து வந்தது. அம்புரோஸ் சென்றபோது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது சிறுமியிடம் சாப்பிட உணவு கேட்டுள்ளாா். சிறுமியும் உணவை எடுத்து வந்து கொடுத்தபோது சிறுமியிடம் அம்புரோஸ் தவறாக நடக்க முயன்றாா். அவா் மறுப்பு தெரிவித்தும் வலுக்கட்டாயமாக சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

Advertisement

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மீண்டும் சில நாள்களில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். அவரது மிரட்டலுக்கு பயந்து சிறுமி அந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் இருந்தாா்.

3 மாதங்களுக்குப் பிறகு சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோா் அழைத்து சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோா் அதிா்ச்சி அடைந்தனா். அதன்பிறகு, நடந்த விவரத்தை சிறுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அம்புரோஸை கைது செய்தனா். அவா் மீது ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அம்புரோஸுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.