மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
ஈரோடுமூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. சிறுவனின் உடலுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மகன் மௌலீஷ் (12). வலிப்பு நோய் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வலிப்பு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, சிறுவனின் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோா் சம்மதித்தனா். இதையடுத்து, சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு கோவை மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், மௌலீஷ் உடலுக்கு அமைச்சா் சு.முத்துசாமி நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அப்போது, எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.