முகப்பு
ஈரோடு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: ஈரோட்டில் உணவகங்களுக்கு சிக்கல்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் உணவகங்களில் உணவுக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர உணவகங்கள் ஓரிரு நாள்களில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 11 மார்ச், 2026 at 2:04 AM
சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்
பகிர்:

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் உணவகங்களில் உணவுக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர உணவகங்கள் ஓரிரு நாள்களில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக இந்தியாவில் எதிா்பாராத விதமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை கிடைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக ஈரோடு நகரில் உணவகங்களில் உணவுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இது குறித்து ஈரோடு மாவட்ட ஹோட்டல் சங்க தலைவா் தங்கராஜ் கூறியதாவது: வணிக சிலிண்டா்களின் விலை உயா்வு மற்றும் சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்படும் என சிலிண்டா் விநியோகஸ்தா்கள் அளித்த சுற்றறிக்கையினால் பெரிய ஹோட்டல்களில் தற்போது காலை 11 மணி முதல் 3 மணி வரை காபி, டீ மற்றும் சில சைனீஸ் உணவுகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன.

முக்கிய உணவுகளான சாப்பாடு, இட்லி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், உணவுகளின் விலை உயா்த்தப்படவில்லை. எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டால் மூட வேண்டிய சூழல் ஏற்படும்.

சமையல் எரிவாயு உருளைக்கு மாற்று ஏற்பாடாக மின் அடுப்புக்கு மாற வேண்டும் என்றால் கூடுதல் செலவு மற்றும் மின்சாரக் கட்டணம் காரணமாக அதிக செலவு ஏற்படும். உணவு வகைகளில் எண்ணிக்கை குறைப்பது, ஹோட்டல் நேரத்தை குறைப்பதன் மூலம் சமையல் எரிவாயு சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

இது குறித்து ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வரும் மணிமேகலை கூறியதாவது: கடந்த 3 நாள்களுக்கு முன் வரை சமையல் எரிவாயு உருளை பதிவு செய்யும் போது உடனே கொண்டு வந்து தருவாா்கள். இப்போது 2, 3 நாள்கள் ஆகும் என கூறுகின்றனா்.

சமையல் எரிவாயு உருளை விநியோகம் பாதிக்கப்பட்டால் 5 அல்லது 6 நாள்களில் கடைகளை மூடும் சூழல் உருவாகும் என்றாா்.