உதகையில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தை ஏன் கலைத்துவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உதகையில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு சுற்றுச்சூழல், கானுயிர்ப் பாதுகாப்புச் சங்கம் இயங்கி வருகிறது. தொடக்க காலத்தில், வன விலங்கு வேட்டையை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இச்சங்கம், இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்த சங்கத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளில் சிலர், அதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெறாதவர்கள் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நிர்வாகக் குழுவிலிருந்த சிலர், போலியான கல்வித் தகுதியைப் பதிவு செய்திருந்ததாகத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மேலும், வனத் துறையின் தங்கும் விடுதிகளில், விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலரை, இச்சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினர்களாக மாற்றுவதற்காக விதிகளை மீறி உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டதாகவும், விதிகளுக்கு உள்பட்டு உறுப்பினராக விண்ணப்பித்தோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக், இச்சங்கத்தை கலைத்துவிடலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பல்வேறு முக்கியப் பிரமுகர்களின் வற்புறுத்தலால் சங்கத்தைக் கலைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, நீதிபதி கிருபாகரன், பல்வேறு முறைகேடுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான நிலையில்
இந்தச் சங்கத்தையே ஏன் கலைத்துவிடக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கேள்வி, விசாரணையில் பங்கேற்றிருந்த பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இதுதொடர்பாக இரண்டு வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் இச்சங்கம் தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக, இந்த விசாரணையில் பங்கேற்ற நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.