தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா குன்னூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அனைத்து தற்காப்புக் கலைகள் மற்றும் ஜி குங்பூ ஊசோ அறக்கட்டளை சார்பில், தேசிய அளவிலான குங்பூ மற்றும் கராத்தே போட்டிகள் ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் தமிழகம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், மஞ்சூர், சேலாஸ், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த மாருதி சிட்டோரி யூ கராத்தே பள்ளி மாணவர்கள் 13 பேர் பங்கேற்றனர்.
இதில் தனிநபர் கட்டா பிரிவில் அருண்குமார் தங்கமும், பசுவையா வெள்ளி, வெண்கலம் பதக்கங்களும் பெற்றனர். மற்றொரு தனிநபர் கட்டா பிரிவில் முகமது ராபில் இரு வெண்கலமும், குழு கட்டா பிரிவில் சவுமி ஆதவன் வெண்கலமும் பெற்றனர்.
குழு கட்டா பிரிவில் தஷ்வந்த் தங்கமும், குமுத்தே பிரிவில் வெண்கலமும் பெற்றார். மற்றொரு தனிநபர் கட்டா பிரிவில் மிதிலேஷ் தங்கமும், குமுத்தே சண்டை பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.
தனிநபர் கட்டாவில் பிரதீஷ் வெள்ளி, குழு கட்டாவில் தங்கம், குமுத்தே சண்டை பிரிவில் தங்கம் என 3 பதக்கங்களைப் பெற்றார்.
தனிநபர் கட்டா, குழு கட்டாவில் அஸ்வின் வெள்ளிப் பதக்கங்களை பாபு பெற்றார்.
குழு கட்டாவில் நிவாஸ் வெள்ளியும், தனிநபர் கட்டாவில் ஹரிசுதன் வெண்கலமும், குழு கட்டாவில் வெள்ளியும் பெற்றனர். தனி நபர் கட்டாவில் பிரஜய் தங்கம், குமுத்தே சண்டை பிரிவில் தங்கமும் பெற்றார். மொத்தம், 8 தங்கம் , 7 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கங்களைப் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு குன்னூர் காட்டேரி பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாருதி கராத்தே பள்ளி நிறுவனர் பழனிவேல், பயிற்சியாளர் இனையத்துல்லா, நீலகிரி மாவட்ட விங்ஸ் மார்ஷியல் அறக்கட்டளை துணைத் தலைவர் மருதமுத்து, உறுப்பினர் லிங்கராஜன், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.