மசினகுடியில் மான் கறி வைத்திருந்த 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மசினகுடியில் மான் கறி வைத்திருந்த 4 பேருக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மசினகுடியில் மான் கறி வைத்திருந்த 4 பேருக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மசினகுடி பகுதியில் மான்களை வேட்டையாடி கறி விற்பனை செய்யப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வனப் பகுதிக்குள் மான் ஒன்று சனிக்கிழமை இறந்துள்ளது. இந்த மானின் உடலை மசினகுடி பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை ரகசியமாகக் கடத்தி வந்தாராம். தனக்குத் தேவையானதை எடுத்துக் கண்டு மீதியை மசினகுடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரன் மற்றும் மாதன் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து சிங்காரா வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தனிப்படையினர், விக்ரம் மற்றும் அவரிடமிருந்து மான் கறி வாங்கிய 3 பேரையும் பிடித்து மான் கறியைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் நால்வருக்கும் தலா ரூ. 25ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். இதுதொடர்பாக விக்ரம் மற்றும் மூவரிடமும் வனத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.