கூடலூர் வழியாக கோவைக்கு புதிய வழித்தடம் வழியாக கேரள மாநில அரசுப் பேருந்தின் இயக்கம் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்கியது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் கேரள அரசுப் பேருந்து தாளூர், சேரம்பாடி, பந்தலூர், தேவாலா, நாடுகாணி வழியாக இரவு 11.05 மணிக்கு கூடலூரை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உதகை, மேட்டும்பாளையம் வழியாக அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடைகிறது.
இதையடுத்து, முற்பகல் 11 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு கூடலூர் சென்றடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சுல்தான் பத்தேரியைச் சென்றடைகிறது.
இரவு 7.15 மணிக்குமேல் கூடலூரில் இருந்து உதகை மார்க்கத்துக்கு பேருந்து வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரவு நேரங்களில் சமவெளி பகுதிக்கு அவசர தேவைகளுக்குச் செல்பவர்கள் மற்றும் கோவைக்கு சென்றுவரும் வர்த்தகர்களுக்கு இந்த பேருந்து சேவை வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.