நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பழங்குடியினர் திரளாக பங்கேற்றனர்.
உதகையில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் முதல்முறையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று புதுப்பானையில் பொங்கலிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மலை மாவட்டமான நீலகிரியில் அறுவடையே இல்லாத போதிலும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்றார்.
இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மலைகளைப் பாதுகாப்போம் கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
விழாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த 25க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி போன்ற வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் உள்ளூர் மக்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு இடையே பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் மூத்தோர் என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாஅலுவலர் ராஜன் ஆகியோர் மரக்கன்றுகளையும், மலர்த் தொட்டிகளையும் பரிசாக வழங்கினர். தொடர்ந்து தாவரவியல் பூங்கா வளாகத்தில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதிலும் படுகர் சமுதாயத்தினரோடு, வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று நடனமாடினர்.