நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், டெரேமியா பகுதிகளில் குட்டியுடன் கூடிய ஐந்து யானைகள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டிருந்ததால் இப்பகுதி மக்கள், தேயிலை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் .
தூதூர்மட்டம், டெரேமியா, கொலக்கம்பை ஆகிய கிராமங்களின் அருகே உள்ள வனப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் கூடிய யானைகள் உலவுகின்றன. இதனால் தேயிலைத் தோட்டத்தில் பணிக்குச் செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான தேயிலை எஸ்டேட்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.