குன்னூரில் மாணவரை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குன்னூர், ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக். இவரது மகன் சாகின் (5). இவர் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை அப்பள்ளியின் வகுப்பாசிரியை வெண்டி அனைத்து மாணவர்களுக்கும் பென்சில்களை வழங்கினார். இதனை உடைக்காமல் திரும்ப கொடுக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது. ஆனால் சாகினுக்கு கொடுக்கப்பட்ட பென்சில் ஏற்கெனவே உடைந்துள்ளதாக வகுப்பாசிரியை வெண்டியிடம் சிறுவன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சாகினை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிறுவனின் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் தனக்கு காது வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சாகினை, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவரை கோவை தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்த்தனர்.
இதுகுறித்து மேல் குன்னூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பாசிரியை வெண்டியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.