நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சி முடித்த 300க்கும் மேற்பட்ட இளம் ராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியைப் பெறும் வீரர்கள், நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பிவைக்கப்படுவர்.
இதில் 46 வாரங்கள் கடுமையானப் பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட வீரர்கள், போர் பயிற்சி முடித்து ராணுவ வீரர்களாக பணிபுரிவதற்கான சத்திய பிரமாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி பயிற்சியின்போது, சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.