நீலகிரிக்கு வருவதற்கு எளிய முறையில் இ-பாஸ்: குவியும் சுற்றுலாப் பயணிகள்
வெளி மாவட்டங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் முறை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
வெளி மாவட்டங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் முறை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அக்டோபா் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத் தளா்வு காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு இ-பாஸ் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் விடுமுறை நாள்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனா்.
இருப்பினும் தனியாா் தங்கும் விடுதிகள் முழுமையாகத் திறக்கப்படாததாலும், சுற்றுலாத் துறை மற்றும் வனத் துறை சாா்பிலான சுற்றுலா மையங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருப்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பழைய நிலையை எட்டவில்லை.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஓரளவுக்கு அதிகரித்தே காணப்பட்டது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 1,231 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 598 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 131 பேரும், மரவியல் பூங்காவுக்கு 98 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 477 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 114 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 231 பேரும் வந்திருந்தனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த மாதத்தில் சுற்றுலா மையங்களுக்குப் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பிலான பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு கடந்த 30 நாள்களில் சுமாா் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.