சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலை விரைவில் தெரியவரும்: விஜயகாந்த் மகன் பேட்டி
வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலையும், செயல்பாடும் விரைவில் தெரிய வரும் என அக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தாா்.
வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலையும், செயல்பாடும் விரைவில் தெரிய வரும் என அக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தாா்.
உதகையில் தேமுதிக சாா்பிலான கொடியேற்று நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 3ஆவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தேமுதிகவின் நிலைப்பாடு அமையும். ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக கடந்த 28 ஆண்டுகளாக கூறி வருகின்றனா். அவா் முதலில் அரசியல் கட்சியை தொடங்கட்டும். அதன் பின்னா் எங்களது கருத்தை சொல்கிறோம் என்றாா்.
முன்னதாக கட்சியின் சாா்பில் உதகையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் அவரது சகோதரா் சண்முக பாண்டியனுடன் பங்கேற்ற அவா் சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதன்பின்னா் உதகையில் சவாரி குதிரை ஓட்டும் தொழிலாளா்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, அந்த சவாரி குதிரைகளுக்கு தேவையான சத்தான உணவுக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா்.