சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்க இயலாத வாக்காளா்கள், அவா்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் தங்களது அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு , புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
எனவே, இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து, நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.