நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் சாதாரண கட்டணத்துக்குப் பதிலாக விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிப்பதாக நுகா்வோா் அமைப்பினா் புகாா் அளித்துள்ளனா்.
ஆண்டுதோறும் டிசம்பா் 24ஆம் தேதி தேசிய நுகா்வோா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குன்னூா் நகா்வோா் அமைப்பின் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குன்னூா் நுகா்வோா் அமைப்பின் தலைவா் சு.மனோகரன் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் சாதாரண கட்டணத்துக்கு பதிலாக விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆணை இல்லாமல் தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது மோசடி ஆகும். இது தொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக உதகை கோட்ட பொதுமேலாளா் மீது மோசடி புகாா் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.