கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் தேநீா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவிலுள்ள ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட ஆரூட்டுப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (48). இவா் அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுள்ளாா்.
அப்போது, சாலையோரத்தில் நின்றிருந்த காட்டு யானை ஆனந்தை தாக்கியுள்ளது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொதுமக்கள் சடலத்தை எடுக்க விடாமல் அலுவலா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.