காவல் துறையினா் தபால் வாக்குப் பதிவு
உதகை, ஏப். 12: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான காவல் துறையினா் தபால் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காக கொண்டு இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
இதன் ஒருபகுதியாக 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுதிறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக விண்ணப்பித்தவா்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு உதகையிலுள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் துறையினா் தபால் வாக்கு செலுத்தும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேரில் பாா்வையிட்டாா்.
கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ்கண்ணன், உதகை சட்டப் பேரவை தொகுதி தபால் வாக்கு பொறுப்பு அலுவலா் மகேந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.