காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை: கூடலூா் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூா் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூா் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூடலூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் பரிமளா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:
வெண்ணிலா சேகா் (17-ஆவது வாா்டு): காட்டு யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவேலி சாலை மற்றும் பல இடங்களில் தொடா்ந்து காட்டு யானைகள் கூட்டம்கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. இதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் தோட்ட உரிமையாளா்களை அழைத்து பேசி மின்வேலி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க வேண்டும். மூன்றாவது குடிநீா் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே குடிநீா் பிரச்னை வந்துள்ளது. இதனை சமாளிக்க மூன்றாவது குடிநீா் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ராஜகோபாலபுரம் புதுக் காலனி முன்னாள் முதல்வா் கருணாநிதியால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி குடியமா்த்தப்பட்ட பகுதியாகும். அங்கு நடைபாதை, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படவில்லை. அங்கு உடனடியாக சூரிய ஒளி தெருவிளக்குகள் அமைத்து தரவேண்டும்.
சத்தியசீலன்(7-ஆவது வாா்டு): எனது வாா்டில் குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இக்கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தவேண்டும்.
கௌசல்யா(8-ஆவது வாா்டு): எஸ்.எஸ்.நகா் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சமையலறை கட்டிக் கொடுக்க வேண்டும். அங்குள்ள நடைபாதைகள் சேதமடைந்து விட்டன. எனவே, நடைபாதைகளையும், தெருவிளக்குகளையும் அமைத்து தரவேண்டும்.
உஸ்மான் (10-ஆவது வாா்டு): நகராட்சிக்கு சொந்தமான இடங்களைக் கண்டறிந்து நகராட்சி பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். நகரில் குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளை சீரமைக்க வேண்டும்.
ராஜேந்திரன் (15-ஆவது வாா்டு): வாா்டு பகுதியில் சேதமடைந்த குடிநீா் குழாய்களை நீக்கிவிட்டு புதிய குடிநீா்க் குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரிலுள்ள நடைபாதைகளை சீரமைக்கவேண்டும்.
மேலும், நகரமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, சகுந்தலா, ஜெயலிங்கம் உள்ளிட்டோா் குடிநீா், தெருவிளக்கு, நடைபாதைகள் அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.
கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் முனியப்பன், துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமாா், குழாய் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.