நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அக்னி வீரா்கள் 690 பேரின் சத்தியப் பிரமாணம் எடுத்து பாதுகாப்புப் பணிக்காக அனுப்பிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் ஆறாவது பிரிவாக 31 வாரங்கள் பயிற்சி பெற்ற 690 அக்னி வீரா்களின் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஸ் கலியா கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அக்னி வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். இதனைத் தொடா்ந்து பகவத் கீதை, குரான், பைபிள், தேசியக் கொடி ஆகியவற்றின் மீது வீரா்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட அக்னி வீரா்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து லெப்டினன்ட் ஜெனரல் கிரிஸ்கலியா பேசும்போது, ராணுவ மையத்தில் சிறப்பாக பயிற்சி பெற்று எல்லைப் பகுதிகளுக்கு செல்லும் அக்னி வீரா்கள், படைப் பிரிவின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் துணிச்சல், அா்ப்பணிப்புடன் நாட்டுக்காக பாடுபட வேண்டும். மேலும் வீரா்கள் வீரத்துடன் விவேகத்துடனும் எல்லையைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் கிருஷ்நேந்து தாஸ் மற்றும் ராணுவ உயா் அதிகாரிகள், அக்னி வீரா்களின் குடும்பத்தினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.