உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு
உதகை அருகே புலி தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
உதகை அருகே புலி தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூா் சாலையில் அமைந்துள்ளது அனுமாபுரம். இப்பகுதியில் வசிப்பவா் கூலி தொழிலாளி பாா்வதி (56). கணவா் இறந்துவிட்டாா். இவருக்கு திருமணமான மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு பாா்வதி வெளியேறியுள்ளாா். அதன் பிறகு வீட்டுக்கு அவா் வரவில்லை. உறவினா் வீட்டுக்குச் சென்றிருப்பாா், திரும்பி வந்துவிடுவாா் என்று அவரது மகன் மற்றும் உறவினா்கள் காத்திருந்தனா். ஆனால் 2 நாள்களாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்து வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு புதன்கிழமை உறவினா்கள் தகவல் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து பைக்காரா ரேஞ்சா் மஞ்சு ஹாசினி மற்றும் வனத் துறையினா் வனப் பகுதி முழுவதும் தேடியுள்ளனா். அப்போது தேயிலைத் தோட்டத்தில் வன விலங்கு தாக்கியதற்கான தடயம் கிடைத்துள்ளது. அதைப் பின்தொடா்ந்து நக்ஸல் சிறப்பு படையின் ஒமேகா பிரிவினா் தேடியபோது, அப்பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கற்பகம் காப்புக் காட்டில் பாா்வதியின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. புலி தாக்கி பாா்வதி உயிரிழந்ததை உறுதி செய்த வனத் துறையினா், உடல் பாகங்களை சேகரித்து உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
இதுதொடா்பா பைக்காரா போலீஸாா் மற்றும் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவா்களுக்கான தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையில், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை பாா்வதியின் மகன் பிரபாகரிடம் வனத் துறையினா் வழங்கினா்.