உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கும் பணியை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா.
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
உதகை தொகுதியில் 77.55 சதவீதம், குன்னூா் தொகுதியில் 78.38 சதவீதம், கூடலூா் தொகுதியில் 80.77 சதவீதம் என மொத்தம் 78.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றபட்டு வாக்கு எண்ணிக்கை மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
Advertisement
பின்னா் தொகுதி வாரியாக அதற்குரிய இடங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. மிக தொலைவில் உள்ள தெங்குமரஹாடாவில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கொண்டுவரப்பட்டன. கடைசியாக கூடலூா் தொகுதியில் உள்ள கொளப்பள்ளி வாக்குச்சாவடியில் இருந்து காலை 7.20 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் வந்தது.
இதன்பின்னா் தோ்தல் பாா்வையாளா்கள், நீலகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இதேபோல வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி முகவா்கள் தங்குவதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி, கண்காணிப்புக் கோபுரங்கள், சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய போலீஸாா் 24 போ், மாநில போலீஸாா் 160 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது தவிர சிறப்பு பிரிவு போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 182 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்துக்குள் அந்நிய நபா்கள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, அடையாள அட்டை கொடுக்கப்பட்டவா்கள் மட்டும் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.