திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் தம்பதியைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கணபதிபாளையத்தில் உள்ள திருமலை நகரில் வசித்து வருபவர் தனியார் பின்னலாடை நிறுவன மேலாளர் வெங்கட்ராமன் (47). இவரது மனைவி லட்சுமி (44). இவர், கோலம் போடுவதற்காக சனிக்கிழமை காலை வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இருவர் லட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டுக்குள் புகுந்தனர். லட்சுமியின் சப்தத்தைக் கேட்டு வெளியே வந்த வெங்கட்ராமனிடம் மேலும் மூவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைக் கேட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் திருடன் என்று லட்சுமி சப்தமிட்டுள்ளார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அங்கு வந்துள்ளார். அவர் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து பல்லடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, விரைவாகச் செயல்பட்ட போலீஸார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் மூவரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தப்பியோடிய மேலும் 4 பேரை பல்லடம் போலீஸார் தேடி வருகின்றனர். இதில், காயமடைந்த லட்சுமி பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.