விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத மாநில அரசைக் கண்டித்து ஜூலை 5-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து தெரிவித்தார்.
உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து கு.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோருவது என்பது எங்களைப் பொருத்தவரை கேவலமானது. வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத மாநில அரசைக் கண்டித்து ஜூலை 5-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.